இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்...

  • last year
திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் நேரு திறந்து வைத்த நிலையில், இந்த திறப்பு விழாவுக்கான கல்வெட்டு மற்றும் அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர் நேருவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் சிலர், சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். தாக்குதல் நடந்த போது சிவா ஊரில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கருப்புக் கொடி காட்டிய சிவா ஆதரவாளர்கள் சிலரை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் உட்காரவைத்திருக்கிறது போலீஸ். விஷயம் தெரிந்து அங்கே சென்ற அமைச்சரின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்துக்குள் புகுந்து சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் பெண் காவலர் ஒருவரும் காயம்பட்டிருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நேரு விசுவாசிகள் ஐந்து பேரை உடனடியாக கைது செய்துவிட்டது போலீஸ். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதுமே அந்த ஐந்து நபர்களையும் கட்சியிலிருந்து கட்டம்கட்டிவிட்டது திமுக தலைமை!

Recommended