லண்டன் வன்முறைச் சம்பவம் : மக்களை விழிப்பாக இருக்குமாறு தகவல்துறை அமைச்சகம் வேண்டுகோள்

  • 13 years ago
புலம்பெயர் நாடுளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்றுவருகின்ற வன்முறைச் சம்பவங்களை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிறிலங்கா அரசின் பிரசாரங்களுக்கு, வலுவூட்டுகின்ற வகையில் தமிழர்களின் செயற்பாடுகள் அமையக்கூடாதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் நாதம் ஊடக சேவையூடாக தெரிவித்துள்ளார்.

விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்தில், லண்டனில் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ள திரு.தனம் என அழைக்கப்படும் சூசைப்பிள்ளை மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்து நாதம் ஊடக சேவைக்கு கருத்துரைத்த பொழுதே இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து முரண்பாடுகள் இத்தகைய வன்முறைகளாக தோற்றம் பெறுவது, ஓரு ஆரோக்கியமான விடுதலைப் பண்பாடாக அமையாதென தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திட்டமிட்டு திசை திருப்பிவிடும் சில ஊடகங்களின் செயற்பாடுகளையும்; வன்மையாக கண்டித்துள்ளார்.

Recommended