திண்ணைப் பேச்சு வீரரிடம்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • 12 years ago
தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுச் ;
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரமனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

இந்தத்- திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍ (இந்த திண்ணை)

பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம் ;
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் -
அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் - (இந்த திண்ணை)

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு ;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் - (இந்த திண்ணை)

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும்- பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் - (இந்த திண்ணை)

Category

🎵
Music

Recommended