இதில் இருந்து நீங்கள் தப்பித்திட முடியாது MR.OPS

  • 4 years ago
* ’எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து பன்னீர்செல்வம் சிரித்துப் பேசினார்’ என்று சசிகலா ஆவேசமாகக் குற்றம் சாட்டியபோது, ‘’சிரிப்பது மனிதர்கள் இயல்பு. மிருகங்கள்தான் சிரிக்காது” என்று சூடாகப் பதிலளித்தீர்கள். நியாயமான பதில்தான். ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நீங்கள் எந்த எதிர்க்கட்சிக்காரர்களையும் பார்த்து சிரித்ததில்லை. அப்படியானால் ஜெயலலிதா உங்களை மனிதர்களாக நடத்தியதில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

* மூச்சுக்கு முன்னூறு தடவை ‘’அம்மாவின் ஆன்மா பேசியது”, ‘’அம்மா வழியில் நடப்போம்” என்கிறீர்கள். இப்போது உங்கள் ‘அம்மா’வான ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஊழல் குற்றவாளி. ஓர் ஊழல் குற்றவாளியின் வழியில் நடப்போம் என்று சொல்லும் உங்கள் அரசியல் பாதை நேர்மையாக இருக்கும் என்று எப்படி நாங்கள் நம்புவது?

* நீங்கள் முதல்வராக இருந்தபோதுதான் தலைமைச் செயலகத்திலேயே அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவரின் அறையிலேயே ரெய்டு நடந்தது. அதற்குப் பின் ராம மோகன்ராவ் பேட்டியளித்தபோது, “ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இப்படி நடக்கவிட்டிருக்க மாட்டார்” என்று பேட்டியளித்தார். இதுகுறித்த உங்கள் கருத்தை நீங்கள் இதுவரைக்கும் சொல்லவேயில்லையே?